குன்னூர் மாஜிஸ்திரேட் கைது விவகாரம்: திருப்பூர் எஸ்.பி. மற்றும் இரண்டு டி.எஸ்.பி.க்களுக்கு நோட்டீஸ்
குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் கைது விவகாரத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி மற்றும் இரண்டு டி.எஸ்.பி.க்கள் மீது நீதிமன்ற


குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் கைது விவகாரத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி மற்றும் இரண்டு டி.எஸ்.பி.க்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் மூவரும் ஜூலை 23-ஆம் தேதிக்குள் அவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குன்னூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலைய பெண் எஸ்.ஐ. உமா மகேஸ்வரி கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி மகளிர் போலீஸ் நிலையத்தில் குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜுக்கு எதிராக ஒரு புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்ட நடைமுறையை மீறி மாஜிஸ்திரேட்டு கைது செய்யப்பட்டதாக வழக்குரைஞர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு தாமாக முன்வந்து (சூ மோட்டோ) வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பாக மாஜிஸ்திரேட்டு தங்கராஜை கைது செய்த போலீஸôர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், பெண் வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி, பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், உடுமலைப்பேட்டை டி.எஸ்.பி. சி.பிச்சை, பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் கே.சாந்தமூர்த்தி மற்றும் 3 காவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனைவரும் ஆஜராகினர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த நிலையில் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: குன்னூர் மாஜிஸ்திரேட்டு தங்கராஜை கைது செய்யும் முன்பு நீலகிரி மாவட்ட தலைமை நீதிபதியிடம் அது குறித்து முறையாக தெரிவிக்கவில்லை.
மேலும், அவரை கைது செய்தவுடன் நீலகிரி மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இது தவிர, மாஜிஸ்திரேட்டு தங்கராஜை அவரது சட்ட ஆலோசகரை தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை. இவையனைத்தும் வழிமுறைகளை மீறியதாகும்.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பொன்னி, பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், உடுமலைப்பேட்டை டி.எஸ்.பி. சி.பிச்சை ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதை வெளிப்படுத்துகிறது. அதற்கான ஆவணங்களும் அதைத் தெரிவிக்கின்றது.
எனவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளான அவர்கள் மூவரும் மேலே கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...