சென்னை, மார்ச் 4: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மருந்தகம் மூடப்பட்டுள்ளது.
இதனால், அவசரத் தேவைகளுக்காக மருந்துகள் வாங்க முடியாமல் அவதிப்படுவதாக ரயில் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10-ஆவது நடைமேடை எதிரே பல ஆண்டுகளாக மருந்தகம் இயங்கி வந்தது. ரயில்களில் நீண்ட தூரம் பயணித்து சென்னை வரும் பயணிகளுக்கும், சென்னை வழியாக வடஇந்தியப் பகுதிகளுக்கு நீண்ட நாள்கள் பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த மருந்தகம் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வந்தது. தலைவலி, காய்ச்சல் பாதிப்புகளுக்கு மட்டுமின்றி ரயிலில் பயணிக்கும் பெண்களின் அவசரத் தேவைகளுக்கு இந்த மருந்தகம் பயனுள்ளதாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இந்த மருந்தகம் மூடப்பட்டுள்ளது. இது தங்களை கடுமையாக பாதிப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
மருந்துக் கடைகள் மூடப்பட்டது குறித்து தொடர் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் புத்தகக் கடையில் அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை விற்க அனுமதித்தனர். மேலும், பயணிகள் உதவி மையத்தில் தலைவலி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு இலவசமாகவே மருந்து மாத்திரைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது.
இருந்தபோதும், இவ்வாறு அத்தியாவசிய மருந்துகள் விற்கப்படுவது குறித்து பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தத் திட்டம் பயனற்றுப் போயுள்ளதாகக் கூறுகின்றனர். முழுமையான மருந்தகம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கிடையே, ரயில்நிலையத்தில் மீண்டும் மருந்தகம் கொண்டுவரவும், எழும்பூர் ரயில் நிலையத்தில் முதன் முறையாக மருந்தகம் கொண்டு வரவும் திட்டமிட்டு, அதற்காக கடந்த 2012-இல் ஒப்பந்தப் புள்ளிகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் கோரியது.
10 அடிக்கு 6 அடி நீள அகலத்தில் அமைய உள்ள சிகிச்சை மையத்துடன் கூடிய மருந்தகத்துக்கு குத்தகை கட்டணமாக ரூ. 11 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது.
ஒப்பந்தப் பணிகளை முடித்து 2011 ஜூலை இறுதிக்குள் முடித்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மருந்தகம் திறக்கத் திட்டமிடப்பட்டது.
ஆனால் தெற்கு ரயில்வே குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளி தொகை அதிகமானது என்ற காரணத்தால் பலரும் மருந்தகம் திறக்க முன்வரவில்லை.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் துணைத் தலைமை வர்த்தக மேலாளர் எல். வீரநாராயணன் கூறியது:
மருந்தகம் அமைக்க நடைமுறைகள் கடுமையாக இருப்பதாலேயே, இந்த ஒப்பந்தத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை.
அதாவது, ரயில்வே அமைச்சகத்தின் ஆணைப்படி ரயில்நிலையத்தில் அமைக்கப்படும் மருந்தகத்தில், மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று புதிய விதியைக் கொண்டுவந்தது. ஒருவரும் முன்வராததற்கு இதுவே முக்கியக் காரணம்.
எனவே, மருத்துவர் இருக்க வேண்டும் என்பதற்கு விலக்கு அளிக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும், ஒப்பந்தம் விடப்பட்டு மருந்தகம் திறக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


