சென்னையில் இயங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பிரபல கால் டாக்சி நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் கணக்குகள் அண்மையில் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது, அந்த அலுவலகத்தில் போலி பில்கள் மூலமாகவும், தவறான கணக்குகளை எழுதியும் சில ஊழியர்கள் ரூ. 2 கோடி வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த கால் டாக்சி நிறுவனத்தின் நிர்வாகிகள், சென்னை பெருநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யோகேஷ், ஜெயராஜ், சுரேஷ் ஆகியோர் வாடகை பணம் மூலமாக குறைவாக வருவாய் கிடைப்பதுபோல கணக்குக் காட்டி ரூ.2 கோடியை முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம், அந்த முறைகேடு குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








