தாகூர் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், 'தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் வண்டலூரை அடுத்த காயார் ஊராட்சியைத் தத்தெடுத்து தூய்மைப்படுத்தும் பணியை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர். காயார் ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் தூய்மை குறித்து விளக்கும் குறும்படமும் திரையிடப்பட்டது.
பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் குவிந்து கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பள்ளி மாணவ, மாணவியர் உறுதுணை புரிந்தனர்.
காயார் ஊராட்சி மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்துக் கொடுக்கும் பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கி, மக்கும் குப்பைகள் மூலம் வீட்டில் உரம் தயாரிக்கும் முறையும் கற்றுத் தரப்பட்டது.
உலக வெப்பமயம், காற்று, நீர் மாசு மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் துண்டறிக்கைப் பிரசுரங்கள் கிராமம் முழுக்க விநியோகிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் 10 மரக் கன்றுகள் நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க மாணவர் குழு அமைக்கப்பட்டது.
இது குறித்து தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறும்போது, 'ஒவ்வொரு கல்லூரியும் ஒரு ஊராட்சியைத் தத்தெடுத்து, அங்கு குறைந்த பட்சம் நூறு நாள்கள் தூய்மைப்படுத்தும் பணிக்கு உறுதுணைபுரியும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிக்கு அருகில் உள்ள காயார் ஊராட்சியைத் தத்தெடுத்து, தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அப்பகுதி மக்கள் மத்தியில் தூய்மை விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளோம்' என்றார் அவர்.
உதவிப் பேராசிரியர் டெல்பின், காயார் ஊராட்சி அலுவலர் ரகுபதி ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.