எண்ணூர் காவல் சரகத்தில் ஒரே நேரத்தில் 3 காவல் ஆய்வாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் காவல் நிலையங்களில் பணிபுரியும் இதர காவல்துறையினர் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வடசென்னை பகுதியில் எண்ணூர் சரகத்தில் உள்ள எண்ணூர், மணலி புதுநகர், சாத்தாங்காடு உள்ளிட்ட காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு திங்கட்கிழமை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையர் ஒருவருக்கும் திங்கட்கிழமை தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து இந்த நான்கு பேரும் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நேரத்தில் ஒரே சரகத்தில் மூன்று காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களுக்கு தொற்று பரவியிருப்பது இதர காவல்துறையினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு என்பது தினமும் பெரும்பாலான காவல்துறையினரிடம் தொடர்புகொண்டு பணி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பாகும். இதனால் தொற்று பாதித்த காவல் ஆய்வாளர்கள் ஏராளமான காவல்துறையினருடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேற்றும் இன்றும் ஏராளமான காவல்துறையினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதன் முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிகிறது. இதில் பலருக்கும் தோற்று பரவியிருக்கலாம் என்பதால் காவல்துறையினரிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் அவர்களது அன்றாட பணிகளிலும் எதிரொலித்தது திங்கட்கிழமை தொற்று பரவியது தெரியவந்ததை அடுத்து பெரும்பாலான காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்தனர். இதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் சிலர் எவ்வித தடையுமின்றி வெளியே செல்லத் தொடங்கினர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனங்களை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக ஆங்காங்கு தடுப்புகளை ஏற்படுத்திய காவல்துறையினர் தேவையற்ற வகையில் சுற்றித்திரிந்த பலர் மீதும் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
வைரஸ் தொற்று காவல்துறையினருக்கு தொடர்ந்து அதிக அளவில் பரவி வருவதை அடுத்து அவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் காவல் நிலையங்களில் காவல்துறையினருக்கு ஏற்கனவே கடும் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் தற்போதைய நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளது. இதற்கு முன்பு தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை கட்டு படுத்த பட்டா பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிக்கப்படும் நபர்கள் வசிக்கும் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.