சென்னை: வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி 12 பவுன் நகைக்காக கொலை
சென்னை கே.கே.நகரில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி 12 பவுன் தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை கே.கே.நகரில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி 12 பவுன் தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கே.கே.நகர் பாரதிதாசன் காலனி எச் பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் வசித்தவர் சீதா லட்சுமி (78). இவர் கணவர் குருமூர்த்தி ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சீதா லட்சுமி, அங்கு தனியாக வசித்து வந்தார். சீதா லட்சுமியின் மகள் புவனேஷ்வரி துபையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தினமும் செல்லிடப்பேசி மூலம் தனது தாய் சீதாலட்சுமியிடம் பேசுவது வழக்கம்.
இந்நிலையில் புவனேஷ்வரி, வெள்ளிக்கிழமை செல்லிடப்பேசி மூலம் சீதா லட்சுமியை தொடர்புக் கொள்ள முயன்றார். ஆனால் சீதா லட்சுமி செல்லிடப்பேசியை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த புவனேஷ்வரி, சீதாலட்சுமி வசிக்கும் வீட்டின் எதிரே வசிக்கும் ரித்திஷ் என்பவரை தொடர்புக் கொண்டு சீதாலட்சுமியை வீட்டுக்குச் சென்று பார்த்து வரும்படி கூறியுள்ளார்.
உடனே, அவர் சீதா லட்சுமி வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார். வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததினால், ஜன்னல் வழியாக வீட்டை எட்டி பார்த்தார். அப்போது அங்கு படுக்கை அறையில் கட்டிலில் சீதாலட்சுமி காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
சீதா லட்சுமியை சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் அவர் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சீதாலட்சுமி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சீதாலட்சுமியின் வீட்டுக்கு தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆகியோர் விரைந்து வந்து அங்கிருந்து தடயங்களையும்,கைரேகைகளையும் சேகரித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு: இச் சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சீதாலட்சுமியை மர்ம நபர்கள் தாக்கி படுக்கையில் தள்ளி கழுத்தை நெரித்து மூச்சுத் திணறச் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...