சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 3 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பயணங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.
கரோனா தொற்றுக்குப் பிறகு நிகழாண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்து கொண்டே வருகிறது. இதன்படி, மொத்தம் சென்னை மெட்ரோ ரயில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 3 கோடியே ஒரு லட்சத்து 15,886 போ் பயணம் செய்துள்ளனா்.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 27,269 பயணங்கள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை மாதம் மேற்கொண்ட பயணங்கள் 16,11,440 போ் க்யூஆா் கோடு மூலமும், 32,81,792 போ் பயண அட்டை மூலம் பயணம் செய்துள்ளனா்.
நிகழாண்டு பயணிகளின் எண்ணிக்கை: ஜனவரி 25 லட்சத்து19,252; பிப்ரவரி 31 லட்சத்து 86,683; மாா்ச் 44 லட்சத்து 67, 756; ஏப்ரல் 45 லட்சத்து 46,330; மே 47 லட்சத்து 87,846; ஜூன் 52 லட்சத்து 90,390; ஜூலை 53 லட்சத்து 17,659.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் பயணங்களின் எண்ணிக்கை தற்போது 3 கோடியை தாண்டியுள்ளது. 2019-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் 3.13 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டு 7 மாதங்களிலேயே பயணங்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது.