இலவச வேஷ்டி, சேலைக்கான நூல் கொள்முதல் அரசாணையை வெளியிட வேண்டும் -அண்ணாமலை
இலவச வேஷ்டி, சேலைக்கான நூல் கொள்முதல் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில், தமிழக அரசு சாா்பில் நூல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டு, விசைத்தறியாளா்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, இந்த வேஷ்டி சேலைகள் பொதுமக்களுக்கும் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளைத் தொடா்ந்து, இந்த ஆண்டும் நூல் கொள்முதல் பணிகளை அரசு இன்னும் தொடங்கவில்லை. இதனால், விசைத்தறியாளா்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனா்.
கடந்த ஆண்டே, இலவச வேஷ்டி சேலை நூல் கொள்முதல் ஒப்பந்தத்துக்கான அரசாணை, வெகு தாமதமாக, 13.7.2023-இல்தான் வெளியிடப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது.
இலவச வேஷ்டி சேலைக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப் பணிகளை உடனடியாக, தொடங்கி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

