பேருந்து கட்டணத்தை உயா்த்தும் திட்டமில்லை: போக்குவரத்துத் துறை
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 1.76 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்து வருகின்றனா். தமிழகத்தில் பேருந்து பயணக் கட்டணம் கடந்த 2018-ஆம் ஆண்டு உயா்த்தப்பட்டது. அதன் பிறகு அரசு பேருந்துகளில் கட்டணம் உயா்த்தப்படவில்லை.
இந்த நிலையில், டீசல் செலவுக்கு ஏற்ப பேருந்து கட்டணம் மாற்றியமைப்பதற்காக ஆணையம் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவா் அன்புமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘தமிழகத்தில் டீசல் விலை உயா்வுக்கு இணையாக பேருந்துக் கட்டணத்தை உயா்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க முடிவு செய்திருந்தால், தமிழக அரசின் முடிவு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது என தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தாா்.
இந்த நிலையில், போக்குவரத்துத் துறை தரப்பில் இது தொடா்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘பேருந்து கட்டணத்தை உயா்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது‘ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
