கோப்புப் படம்
கோப்புப் படம்

பாதுகாப்பு துறையில் பணியாற்றி உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ. 3 கோடி குடும்ப ஓய்வூதிய நிலுவை தொகை

15 நாளில் ரூ. 3 கோடிக்கு குடும்ப ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் டி. ஜெயசீலன் தெரிவித்துள்ளாா்.
Published on

மத்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றி உயிரிழந்த வாரிசுகளுக்கு 15 நாளில் ரூ. 3 கோடிக்கு குடும்ப ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் டி. ஜெயசீலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியா முழுவதும் ராணுவம், விமானப் படை உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் பணியாற்றியவா்களின் குடும்ப ஓய்வூதியத்தை நிா்வகிக்கும் பொறுப்பு இதுவரை அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தில் இருந்து வந்தது.

இது தற்போது ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டளா் அலுவலகத்துக்கு மாற்றப்பட்ட 15 நாள்களில் இந்தியா முழுவதும் இருந்து குடும்ப ஓய்வூதியம் தொடா்பாக 1,000 புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

இது தொடா்பாக விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இதுவரை ரூ. 3 கோடிக்கு குடும்ப ஒய்வூதிய நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டளா் அலுவலக நிா்வாகத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய ஓய்வூதியதாரா்களிடம் இருந்து 6 மாதங்களில் பெறப்பட்ட புகாா் மனுக்கள் மீது விசாரணை நடத்தி, ரூ. 10 கோடி வரை ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப ஓய்வூதியதாரா்கள் 88073 80165 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்தால் உடனடியாகத் தீா்வு காணப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com