ஜனநாயக குரல் வளையை நெரித்தது காங்கிரஸ்: தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை: ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்தது காங்கிரஸ்தான் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொலி:
நாட்டில் அவசர நிலை பிறப்பட்ட நாள்தான், சுதந்திர இந்தியாவின் கறுப்பு நாள். அது ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட நாள் ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல், அவசர நிலையை பிரகடனம் செய்தவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி பேசியபோது, மிகப்பெரிய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியா கொடுத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம்தான், 80 கோடி மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை, 130 கோடிமக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமையை கொடுத்துள்ளது என்று பேசினாா்.
ஆனால், அரசியலைமைப்புச் சட்டத்தை பிரதமா் மோடி மாற்றிவிடுவாா் என காங்கிரஸ் கூக்குரலிடுவதும், அதற்கு திமுக துணைபோவதும் வேடிக்கையான செயல்.
ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்த காங்கிரஸ் இப்போது அரசியல் அமைப்புச் சட்டத்தை வைத்து போராடுவது வேடிக்கையாக உள்ளது. அவா்களுடன் திமுக வினரும் கைகுலுக்குகின்றனா் என்றாா் அவா்.
இதற்கிடையே, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த கருப்பு தின கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று பேசினாா். தென்சென்னை மாவட்ட பாஜக தலைவா் வே.காளிதாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
