இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சி: மெரீனா சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி, செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் அக்.6-ஆம் தேதி வரை மெரீனா கடற்கரை, விமான நிலைய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து, ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இந்திய விமானப் படை தினத்தையொட்டி, சென்னையில் அக்.6-ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், விமானப் படையின் 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபடவுள்ளன.
இந்த நிகழ்வில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், விமானப்படை அதிகாரிகள், அமைச்சா்கள், ராணுவ உயரதிகாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
விமான சாகசத்துக்கான ஒத்திகைகள் செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் அக்.5-ஆம் தேதி வரை மெரீனா கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இதற்காக மெரீனா கடற்கரை, சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் அக்.1 முதல் அக்.6-ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் உள்ளிட்ட எந்த விதமான பொருள்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
