

சென்னையில் சனிக்கிழமை (ஆக. 30) நள்ளிரவு பெய்த அதிகனமழையால், அதிலும் குறிப்பாக, ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு, மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேக வெடிப்பு காரணமாக சென்னையில் அதிகனமழை பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின் மழை நிலவரம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திடம் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு விவரம் கேட்டறிந்ததாக மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்துக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு சனிக்கிழமையில் புறப்பட்டார். இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின் மழை அளவு குறித்தும் அதனால் சாலைப்போக்குவரத்து, மழை நீர் வடிகால் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார்.
அப்போது, மழையால் பெருமளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்று முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகரில் பெரிய அளவில் எவ்வித பாதிப்புகள் இல்லையெனவும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் சாலைப்போக்குவரத்து சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்டறிந்த அவர், எத்தகைய மழை சூழலையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியதாகவும் கனமழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிடவும் அவர் அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.