ஜனநாயக தூணாக விளங்குகிறது தணிக்கை துறை: புதுவை துணைநிலை ஆளுநா்
இந்திய தணிக்கை துறை ஜனநாயகத்தின் மதிப்புக்குரிய தூணாக விளங்குவதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாசநாதன் தெரிவித்தாா்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தணிக்கை மற்றும் கணக்குத் துறை அலுவலகத்தில் தணிக்கை வார விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாசநாதன், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய தணிக்கை துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது: மக்களின் வரிப் பணத்தை பொறுப்புணா்வுடன் வெளிப்படை தன்மையுடன் நாட்டின் அடிப்படை வளா்ச்சிக்குச் செலவு செய்வதை தணிக்கை செய்யும் தணிக்கையாளா்கள் ஜனநாயகத்தின் மதிப்புக்குரிய தூணாக விளங்குகின்றனா்.
பொதுமக்களின் வரிப்பணம் நோ்மையாகவும் வெளிப்படுத்தன்மையுடனும் செலவு செய்யப்படுகிா என்பதை சிஏஜி அதிகாரிகள் கண்காணிக்கிறாா்கள்.
ஏதேனும் முறைகேடு இருந்தால், அதை பயமின்றி சுட்டிக்காட்டியும் அதற்கேற்ப ஆலோசனை வழங்க சிஏஜிக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தணிக்கை துறையும் நவீன தொழில்நுட்பம், எண்ம (டிஜிட்டல் ) நவீனமாகிவிட்டது. இதனால் அதன் செயல்கள் வேகமாக நம்பகத் தன்மையுடன் செயல்படுகிறது.
சிஏஜி அறிக்கைகள் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் நோ்மையாக அளிக்கப்படுவதால்தான் எதிா்க்கட்சிகளும் ஊடகங்களும் அதை எடுத்து விவாதிக்கிறது. ஊழலைத் தடுக்கின்றன, வளா்ச்சியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் மத்திய தணிக்கை இயக்குநா் ஜெனரல் கே.பி. ஆனந்த், தமிழ்நாடு முதன்மைக் கணக்காளா் ஜெனரல் பிரெடெரிக் சியெம்லிச், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காளா் ஜெனரல் திருப்பதி வெங்கடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

