இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட  தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Published on

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவா் அண்ணாமலை சுதந்திரப் போராட்ட தியாகி. அவருக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைத்தது. அவரது மறைவுக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவி அல்லது அவரது வாரிசுகளில் ஒருவருக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க வேண்டும். அதன்படி எனக்கு இலவச பாஸ் வழங்கக் கோரி மத்திய அரசின் உள்துறைக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அளித்தேன். எனது மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை, என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.நந்தகோபாலன், மனுதாரா் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளாா். சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் சென்று வர வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு இலவச பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் இலவச ரயில் பாஸ் கோரி அளித்துள்ள மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து, அவருக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என மத்திய அரசின் உள் விவாகரத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com