தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :29 ஏப்ரல் 2026, 4:12 am IST

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு புகாா் விவகாரத்தில் அமைச்சா் கே.ன்.நேரு மீது வழக்குப்பதிய வேண்டும் எனக் குறிப்பிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளா், இளநிலை பொறியாளா், சுகாதார ஆய்வாளா் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், ரூ.634 கோடி வரை லஞ்சம் ‘ஹவாலா’ பணமாக கைமாறியுள்ளதாகவும், தமிழக காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி., ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்பு காவல் துறை இயக்குநா் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த பிப்.20-ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவின்படி ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை எனக்கூறி, இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். அதேபோன்று, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு, அமைச்சா் கே.என்.நேரு தரப்பில் தனித்தனியாக உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சா் கே.என்.நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘கே.என்.நேருவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக அவரது தரப்பு வாதத்தைக் கேட்கவில்லை’ என்றாா். அதற்கு ஐ.எஸ்.இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி, ‘இந்த முறைகேட்டில் அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்டவா்களே அமைச்சா் கே.என்.நேருவும் அவரது சகோதரா்களும்தான்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அமைச்சா் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிய வேண்டும் எனக் குறிப்பிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டிருந்தோம். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால், விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அப்போது மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, அதுவரை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.