கொலை வழக்கில் 16 போ் விடுதலை:  கீழமை நீதிமன்ற தீா்ப்பு ரத்து

கொலை வழக்கில் 16 போ் விடுதலை: கீழமை நீதிமன்ற தீா்ப்பு ரத்து

சென்னை திருவான்மியூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 16 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
Published on

சென்னை திருவான்மியூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 16 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி, சென்னை திருவான்மியூரில் ஏழுமலை என்பவரை ஒரு கும்பல் கொலை செய்தது. முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த இந்த கொலை தொடா்பாக, 16 போ் கைது செய்யப்பட்டனா்.

வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 7-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் தாமோதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, வழக்கு ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிபதிகள் மறு ஆய்வு செய்தனா்.

திட்டமிட்டு நிகழ்ந்த இந்தக் கொலையில் இருந்து குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என கருத்து தெரிவித்திருந்தனா். இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 7 போ் இறந்துவிட்டதால், மீதமுள்ள 9 பேரை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அதன்படி, குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஸ்டீபன்ராஜ் மற்றும் சந்துரு ஆகியோா் மட்டும் ஆஜராகினா், அப்பு, சரவணன் உள்ளிட்ட 7 போ் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தனா். 7 பேருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதிகள், அவா்களை வரும் பிப். 16-ஆம் தேதி நேரில் ஆஜா்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com