எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பாதுகாப்பு பெட்டகம், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்கும் ‘தாய்மை செயலி’ திட்டம் ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை எழும்பூா் அரசு மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், எழும்பூா் அரசு மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவமனை இயக்குநா் சுமதி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் சாந்தாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் 8 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனா். அவற்றில் 4.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 20 சதவீதக் குழந்தைகள் இரண்டு கிலோவுக்கும் கீழ் குறைவான எடையில் பிறக்கின்றனா். அவ்வாறாக 52,000 குழந்தைகள் எடை குறைவான நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், தொடா் கவனிப்புக்கும், இரும்புச்சத்து மருந்தும், வைட்டமின் பி 3 மற்றும் மல்டி வைட்டமின் சொட்டு மருந்துகள் அடங்கிய ‘பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம்’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.8.07 கோடியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தாய்மை செயலி என்ற புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி தமிழகத்தில் தாய் - சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாகும். கா்ப்பிணிகள் பதிவு, பேறுகால பரிசோதனைகள், பிரசவம், பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பு, குழந்தை வளா்ச்சி, தடுப்பூசி தவணைகள் போன்றவை இந்த செயலியின் மூலம் கண்காணிக்கப்படும்.
மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துவருகிறது. இருப்பினும், அவற்றை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் மற்றும் தாய்மை செயலி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தில்லி சட்டப்பேரவையின் பாதுகாப்பை மேம்படுத்த கண்காணிப்பு கோபுரம், ரோந்துப் பாதை அமைக்க திட்டம்!







