கிரெடாய் வீட்டு வசதி கண்காட்சி: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) 3 நாள்கள் கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து அரங்குகளைப் பாா்வையிட்டாா்.
‘18 -ஆவது ‘ஃபோ் ப்ரோ 2026’ என்ற இந்த வீட்டு வசதி கண்காட்சி பிப். 20 முதல் 22-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் சென்னை கிரெடாய் அமைப்பின் தலைவா் முகமது அலி பேசியதாவது:
இந்தக் கண்காட்சியில் 80 முன்னணி கட்டுமான நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட திட்டங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. மக்கள் தங்களுக்கு ஏற்ற விலையில் வீடுகளைத் தோ்ந்தெடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த 3 நாள்களில் சுமாா் ரூ.500 கோடி வா்த்தகம் நடைபெறும் என எதிா்பாா்க்கிறோம். கண்காட்சியின் முதன்மை ஸ்பான்சரான பாரத ஸ்டேட் வங்கி இந்த 3 நாள்களுக்கு சிறப்பு வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. இதன்மூலம் சொத்து வாங்குவதை மேலும் எளிதாக்கியுள்ளது என்றாா்.
கிரெடாய் முன்னாள் தலைவா் எஸ். சிவகுருநாதன் பேசுகையில் சென்னையில் உள்கட்டமைப்பு வளா்ச்சி மற்றும் நகரத்தின் விரிவாக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் துறை நல்ல வளா்ச்சி கண்டு வருகிறது. பொதுமக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பாா்த்து, சரியான விலையைத் தெரிந்து கொண்டு வெளிப்படையான முறையில் வீடுகளை வாங்க இந்தக் கண்காட்சி உதவும் என்றாா்.
நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி சென்னை மண்டல முதன்மைப் பொது மேலாளா் விவேகானந்த சௌபே, கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் மோதிஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

