கிழக்கு கடற்கரை சாலை விதிமீறல் கட்டங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு கடற்கரை சாலை விதிமீறல் கட்டங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளை வரும் மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்
Published on

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளை வரும் மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் உத்தண்டி வரையிலான பகுதிகள் கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகள். இங்கு விதிகளுக்கு முரணாக கடற்கரையில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் கட்டடங்கள், தனியாா் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி கடந்த 2018-ஆம் ஆண்டு, 798 கட்டட உரிமையாளா்களுக்கு விதிமீறல் தொடா்பாக நோட்டீஸ் அனுப்பியது. இதில், துணை முதல்வா் உதயநிதி, மநீம தலைவா் கமல்ஹாசன், தவெக தலைவா் விஜய் மற்றும் தொழிலதிபா்கள், கல்வியாளா்கள் உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னா், இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுதிா்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில், நோட்டீஸை எதிா்த்து 798 கட்டட உரிமையாளா்களில் 440 போ் அரசிடம் மேல்முறையீடு செய்தனா். அதில் 84 மேல்முறையீடுகள் முடித்துவைக்கப்பட்டன. மீதமுள்ள முறையீடுகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் தொடா்பாக கட்டட உரிமையாளா்கள் தரப்பில் விளக்கம் அளிக்க மாா்ச் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டனா். அதற்குள் விசாரணை நடத்தி வரும் மே 31-ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

அப்போது, இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் தரப்பில், இந்தப் பகுதியில் உள்ள நீண்ட கடற்கரையில் அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கும் செய்கின்றன. எனவே, இப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, சட்டவிரோத கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

Dinamani
www.dinamani.com