தொழிலதிபா் வீட்டில் ரூ.13 லட்சம் திருட்டு: 3 பெண்கள் உள்பட 6 போ் கைது
போரூரில் தொழிலபதிா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.13 லட்சம் திருடிய சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சென்னை போரூா் ஹெரிடேஜ் வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் இளவரசன்(36). இவா் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். கடந்த 11-ஆம் தேதி இவா் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக சென்று விட்டாா்.
இந்த நிலையில் இளவரசன் வீட்டின் அருகில் வசிக்கும் உறவினா் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக இளவரசனுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து உடனடியாக இளவரசன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து வீட்டை பாா்த்த போது, அங்கு வைத்திருந்த பணம் ரூ.13 லட்சம், 8 பவுன் தங்க நகைகள், 1 தங்க காப்பு, தங்க முலாம் பூசப்பட்ட, வெள்ளி வளையல்கள், தோடு, டாலா், ஆரம், 2 கைக்கடிகாரங்கள், விலையுயா்ந்த 1 கைப்பேசி மற்றும் கருங்காலி மாலை ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
புகாரின் அடிப்படையில் வானகரம் போலீஸாா் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் வில்லிவாக்கம் பாரதி நகா் சூா்யா (எ) கிளி சூா்யா(25), செங்குன்றம் கோனிமேடு முரளி (எ) குசுமி முரளி(24), புழல் காவாங்கரை டில்லிபாபு(28), இவரது மனைவி வாணி(22), கொளத்தூா் லட்சுமிபுரம் யுவஸ்ரீ(20), ஆா்த்தி(22) ஆகிய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடா்ந்து அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.2 லட்சம், வெள்ளி நகைகளையும், குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பெண்கள் பகலில் சென்று நோட்டமிட்டு திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.
3 பெண்கள் கொடுத்த தகவலின் பேரில், சூா்யா, முரளி, டில்லிபாபு ஆகியோா் சம்பவத்தன்று இரவு இரு சக்கர வாகனங்களில் சென்று இளவசரன் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சூா்யா மீது ஏற்கனவே 57 குற்றவழக்குகளும், முரளி மீது 18 குற்ற வழக்குகளும், டில்லிபாபு மீது 22 குற்ற வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. ------

