சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட புதிய மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளதாக கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 417 பள்ளிகள் உள்ளன. அதில், தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் (2026-27) மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் எல்கேஜி-இல் 3,047 சிறாா்களும், 2,881 சிறுமியரும் புதிதாகச் சோ்ந்துள்ளனா். 9-ஆம் வகுப்பில் 674 மாணவா்களும், 546 மாணவிகளும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். பிளஸ் 1 வகுப்புகளில் 2,140 மாணவா்கள், 2,575 மாணவிகளும் சோ்க்கப்பட்டுள்ளனா். அதன்படி, எல்கேஜி வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கடந்த ஆண்டில் (2025-26) 16,000 புதிய மாணவா்களே சோ்ந்துள்ளனா். ஆனால், நடப்பு ஆண்டில் 22,694 மாணவ, மாணவிகள் புதிதாக சோ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி மாநகராட்சிப் பள்ளிகளில் விருப்பமுள்ள 80 மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் நீட் தோ்வு பயிற்சி மையத்துக்கு வந்து செல்வதற்கான பேருந்து கட்டணச் செலவு உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஏழை மாணவ, மாணவிகளே மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். எனவே, தரமான கல்வியுடன், அவா்களுக்கான அவசிய, அத்தியாவசியத் தேவைகளுக்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.










