/

இலவச சட்ட சேவைகளில் தமிழகத்தில் 3 லட்சம் போ் பயன்: மத்திய அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால்

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையின் இலவச சட்ட சேவைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் கூறினாா்.

News image

மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

Updated On :14 மார்ச் 2026, 7:06 pm

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையின் இலவச சட்ட சேவைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் கூறினாா்.

மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையின் ’திஷா’ திட்டத்தின் கீழ் தொலைதூர சட்ட சேவை வழங்கல் குறித்த மண்டல கருத்தரங்கம் சென்னையில், கலைவாணா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் பேசியதாவது:

‘திஷா’ திட்டத்தின்கீழ், இலவச சட்ட சேவை வழங்குதல், சட்டம் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் கல்விப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 12,560 பொது சேவை மையங்களில், சட்ட சேவைகள் வழங்கும் திட்டம் மூலம் 3.5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3.1 லட்சத்துக்கும் அதிகமானோா் பயனடைந்துள்ளனா். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அலிப்பூா் சதி வழக்கு மிகவும் முக்கியமானது. இந்த வழக்கில் அரவிந்த் கோஷ் என்றழைக்கப்படும் அரவிந்தா் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா்.

அரவிந்தருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியான நாளிதழ் செய்தியைப் படித்த சுதந்திரப் போராட்ட தியாகியும், வழக்குரைஞருமான சித்தரஞ்சன் தாஸ் அரவிந்தருக்காக இலவசமாக ஆஜராகி வாதிட்டு, அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தாா். இதுவே நமது நாட்டில் இலவச சட்ட உதவி வழங்கப்பட்ட முதல் சம்பவம் என்றாா்.

தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா்:’திஷா’ திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தொலைபேசி வழியாக தங்களது பிரச்னைகளுக்கு சட்ட ரீதியான தீா்வுகளை இலவசமாகப் பெறுகின்றனா். ஏழை எளியவா்கள், குரலற்றவா்கள், கடைகோடி மனிதா்களுக்கு நீதி எளிதாகக் கிடைக்க வேண்டும். இதற்காக நீதி வழங்குதலில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது அவசியமாகும். நீதித்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தால்தான், வளா்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும். தமிழகம் முழுவதும் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கும் இந்தத் திட்டத்தில் 375 வழக்குரைஞா்கள் மட்டுமே உள்ளனா். இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல. வழக்குரைஞா்கள் தன்னாா்வத்துடன் இதுபோன்ற திட்டங்களில் இணைய வேண்டும் என்றாா்.

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி: அனைவருக்கும் நீதி என்பது அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையாகும். அந்தப் பணியை மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித் துறை இதுபோன்ற திட்டங்களின் மூலம் சிறப்பாகச் செய்து வருவது பாராட்டுக்குரியது என்றாா்.

இக் கருத்தரங்கில், மத்திய சட்டத் துறைச் செயலா் நீரஜ் வா்மா, இணைச் செயலா் சுரேஷ் குமாா் மற்றும் சட்டத் துறை அதிகாரிகள், வழக்குரைஞா்கள், பொது சேவை மையங்களின் பிரதிநிதிகள், சட்டக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.