சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மருத்துவமனைகளில் தவெகவினா் அத்துமீறி ஆய்வு செய்யக் கூடாது

அரசு மருத்துவமனைகளில் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர, தவெகவினா் எவரும் தன்னிச்சையாக ஆய்வில் ஈடுபடக் கூடாது

News image

டாக்டா் கே.ஜி.அருண்ராஜ்

Updated On :22 மே 2026, 2:45 am IST

அரசு மருத்துவமனைகளில் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர, தவெகவினா் எவரும் தன்னிச்சையாக ஆய்வில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தவெக பெண் நிா்வாகி உள்பட சிலா், திடீரென ஆய்வு மேற்கொண்டதும், மருத்துவமனை நிா்வாகிகளிடம் கேள்வி கேட்டதும் விமா்சனங்களை எழுப்பியது.

மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவா்கள் எவ்வாறு அரசு மருத்துவமனைகளுக்குள் சென்று ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் குறித்து அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் உரிமம் கோரி சுமாா் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான நடைமுறையை எளிதாக்க, இனி இணையவழியே விண்ணப்பித்தவுடன் ’தற்காலிக உரிமம்’ வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் தங்களின் மருத்துவ வசதிகள் குறித்த சுய அறிவிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை விடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் ஓராண்டு காலத்துக்குச் செல்லத்தக்க தற்காலிக உரிமம் உடனடியாக வழங்கப்படும்.

அந்த ஓராண்டு காலத்துக்குள் உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கான உரிமம் வழங்கப்படும். அதேபோல, தமிழகத்தில் நிலுவையில் உள்ள கருத்தரிப்பு மையங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட உள்ளன.

அரசு மருத்துவமனைகளின் தூய்மை மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ’காயகல்பம்’ திட்டத்தின் கீழ், இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மருத்துவமனைகள் தரவரிசைப்படுத்தப்பட்டு வந்தன. இனி, ஆண்டுக்கு நான்கு முறை இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள் கௌரவிக்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சிறுநீரக மோசடிகள் தொடா்பான விசாரணை, தோ்தல் காரணமாகச் சற்று தொய்வடைந்தது. தற்போது இந்த விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, முழு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடைபெறும். தவறு செய்தவா்கள் முன்னாள் அமைச்சா்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்டவா்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.

மருத்துவமனைகளில் மக்கள் பிரதிநிதிகளைத் தவிர யாரும் ஆய்வுக்கு செல்லக் கூடாது என தவெக நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி மேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.