காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் கோயிலுக்கு நன்னீராட்டல் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்த்தாய் திருக்கோயில் அறக்கட்டளை சார்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி பூமி பூஜை செய்யப்பட்டு திருக்கோயில் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு தமிழ்த்தாய் சிலை பீடத்தில் அமர்த்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் கூரம் துரை தலைமை தாங்கினார்.
ஏகாம்பரநாதர் கோயில் குருக்கள் காமேஸ்வரன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தமிழ்த்தாய் கோயில் அறக்கட்டளை நிறுவனர்கள் வ.கோ.ரங்கசாமி, தேன்மொழி ரங்கசாமி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன், காஞ்சி மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ஏமநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.