கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள்
By DIN | Published On : 04th January 2019 03:11 AM | Last Updated : 04th January 2019 03:11 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட 2012 மற்றும் அதற்கடுத்த ஆண்டுகளுக்குரிய உதவியாளர்களின் முதுநிலைப் பட்டியலை ஆண்டு வாரியாக மாவட்ட அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும், தற்காலிக துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு உடனடியாக துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், 15.9.2018 தேதி வெளியிட வேண்டிய துணை வட்டாட்சியர் பட்டியலை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும், முதுநிலை அடிப்படையில் பொது கலந்தாய்வு நடத்திய பின்னரே, பணியிட மாறுதல்களை செய்ய வேண்டும். மணல் கடத்தலைத் தடுக்க இரவு பணியில் வருவாய் ஆய்வாளர்களை ஈடுபடுத்தும்போது, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வாகனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 7-ஆம் தேதி விடுப்பு எடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், வரும் 21-ஆம் தேதி வருவாய் நிர்வாக ஆணையரை சந்தித்து முறையிடவும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.