குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 14th June 2019 04:15 AM | Last Updated : 14th June 2019 04:15 AM | அ+அ அ- |

மதுராந்தகம் அருகே விநாயகநல்லூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் விநாயகநல்லூர். இங்கு 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாள்களாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் விநாயகநல்லூர்-வேடந்தாங்கல் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ஏழுமலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, குடிநீர் கோரிக்கை குறித்து அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு எழுதிக் கொடுங்கள். அவருடன் பேசி விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்படும் என காவல் ஆய்வாளர் ஏழுமலை கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.