மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்வி பூஜை
By DIN | Published On : 05th May 2019 12:39 AM | Last Updated : 05th May 2019 12:39 AM | அ+அ அ- |

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரை மாத அமாவாசை வேள்வி பூஜை சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
சித்தர் பீடத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிலை வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமாவாசை வேள்வி பூஜையை முன்னிட்டு சித்தர் பீட வளாகத்தில் உள்ள ஓம்சக்தி பீடத்தின் முன் முக்கோணம், சதுரம் உள்ளிட்ட அமைப்புகளில் 108 சிறிய வடிவிலான யாக குண்டங்களும், எண்கோண வடிவிலான பெரிய யாககுண்டமும் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4.05 மணிக்கு பெரிய எண்கோண யாக குண்டத்தில் பங்காரு அடிகளார் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையைத் தொடங்கி வைத்தார். ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார்.
நீண்ட வரிசையில் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய யாக குண்டத்தில் நவ தானியங்களையும், ஹோமக் குச்சிகளையும் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.