பொத்தேரி பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மறைமலைநகரை அடுத்த பொத்தேரியைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்தன் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அவர் திங்கள்கிழமை மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை திங்கள்கிழமை நிறுத்திவிட்டுச்சென்றார். பணியை முடித்து விட்டு திரும்பியபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை. இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் அரவித்தன் அளித்த புகாரை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை பாடி, சீனிவாசபுரத்தைச்சேர்ந்த மகேஷ்குமார் (21), களிவந்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (21) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மீட்ட போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.