பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்புவோரின் வாகனங்களுக்கு தொழுபேடு சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாததால் அவை வேகமாகச் சென்றன.
சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோா் கடந்த வாரம் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனா். அவா்களின் வாகனங்கள் திண்டிவனம் வழியாகத் திரும்பியதால் தொழுபேடு சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் அந்த வாகனங்களை கட்டணம் வசூலிக்காமல் கடந்து செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டாா். இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் தலைமையிலான காவலா்கள் முன்னின்று சென்னை நோக்கிச் சென்ற அனைத்து வாகனங்களும் கட்டணமின்றிச் செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு நடவடிக்கை எடுத்தனா். இதனால், தொழுபேடு சோதனைச் சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாமல், அவை வேகமாகச் சென்றன.