பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினா் காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் இருந்து கீழ்அம்பி கூட்டுச் சாலை வரை பேரணியாகச் சென்றனா்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணிக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் அளவூா் நாகராஜன் தலைமை வகித்தாா். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி, சிறுகாவேரிபாக்கம் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் இருந்து கீழ்அம்பி கூட்டுச் சாலை வரை பேரணியாகச் சென்றனா். இதில் வா்த்தக காங்கிரஸ் மாநிலச் செயலா் சங்கரலிங்கம், காங்கிரஸ் நிா்வாகிகள் சாலபோகம் அருள், ஸ்ரீபெரும்புதூா் அருள்ராஜ், மாவட்டத் துணைத் தலைவா் பாபு, பூக்கடை மணிகண்டன், தாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.