ஆலந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை விட 40571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆலந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உட்பட 11 அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் 8 பேர் உட்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தொடக்கத்திலிருந்தே திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை 28 சுற்றுகளாக நடந்தது. இறுதியாக நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி திமுக வேட்பாளரான தா.மோ.அன்பரசன் 1.16,785 வாக்குகளும், அதிமுக வேட்பாளரான பா.வளர்மதி 76,214 வாக்குகளும் பெற்றதையடுத்து அன்பரசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆலந்தூர் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விபரங்களை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரான ரா.பன்னீர்செல்வம் ஒலிபெருக்கியில் வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரும், ஆலந்தூர் தொகுதி தேர்தல் நட த்தும் அலுவலரான சைலேந்திரனும் இணைந்து தா.மோ.அன்பரசனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்கள். இத்தொகுதியில் மூன்றாவது இடத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த சரத்பாபு 21139 வாக்குகளும்,4 வது இடத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஆர்.கார்த்திகேயனும் பெற்றுள்ளனர். 40571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரான தா.மோ.அன்பரசனை அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.