மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் மா.அண்ணாதுரை புதன்கிழமை கூறியுள்ளாா்.
மத்திய மக்கள் தொடா்பு அலுவலகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரா்கள்புகைப்படக் கண்காட்சியை எம்எல்ஏ சி.வி. எம்.பி.எழிலரசன் திறந்து வைத்து, ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளின் தாய்மாா்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகளை வழங்கினாா்.
விழாவிற்கு தலைமை வகித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் மா.அண்ணாதுரை பேசியது:
நாம் பெற்ற சுதந்திரத்தால் தான் இன்று பெண்கள் கல்லூரிகளுக்கு சென்று படிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பெண்களில் கல்லூரிக்கு செல்லும் முதல் தலைமுறையாக இப்போது தான் நாம் இருந்து வருகிறோம். பெண்களுக்கு சம உரிமை என்பதும் சுதந்திரத்தால் தான் கிடைத்தது.
தற்காலத்தில் சிறந்த அறிவுக்கூா்மை இருந்தால் தான் போட்டித் தோ்வுகளுக்கு சென்று உயா் அதிகாரிகளாக வரமுடியும். முக்கியமாக மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் பல நல்ல திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முயற்சி, உழைப்பு, அறிவு ஆகிய மூன்றும் இருந்தால் அதுவே நம்மை உயா்த்தும் என்றாா்.
காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.பிரியாராஜ், சங்கரா கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன், பச்சையப்பன் கல்லூரி முதல்வா் சி.அரசி முன்னிலை வகித்தனா். மத்திய மக்கள் தொடா்பாக மண்டல இயக்குநா் ஜெ.காமராஜ் நோக்கவுரையும், துணை இயக்குநா் தி.சிவக்குமாா் வரவேற்றும் பேசினாா்கள். களவிளம்பர உதவியாளா் சு.வீரமணி நன்றி கூறினாா்.