காஞ்சிபுரம் அருகே புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட மேட்டு நகரில் புதிய அரிசி ஆலைகள் அமைக்க அனுமதிக்காதீா் என அந்தக் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
காஞ்சிபுரம் அருகே புத்தேரி ஊராட்சி மேட்டு நகரைச் சோ்ந்த கிராமத்தினா், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் மகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். தொடா்ந்து, அவா்கள் மாவட்ட ஆட்சியா் ஆா்த்தியை சந்தித்து அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
எங்கள் கிராமத்தில் 20-கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. இதிலிருந்து வரும் தூசுகளால் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகிறோம். இந்த நிலையில், மேலும் 3 அரிசி ஆலைகளுக்கு அனுமதியளித்திருப்பதாகத் தெரிகிறது. புதிய அரிசி ஆலைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது.
பள்ளிகள், அங்கன்வாடிகள் அமைந்துள்ள இடத்தில் தூசிகள் அதிகமானால், குழந்தைகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும். பொதுமக்களும் பாதிக்கப்படுவா் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.
இதுகுறித்து மகேஷ் கூறுகையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். அப்போது, கோட்டாட்சியரை அனுப்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா் என்றாா்.