அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சொத்து வரி உயா்வை அமல்படுத்தும் வகையில் தீா்மானம் நிறைவேற்ற நடைபெற்ற அவசரக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஜி.எழிலரசன், துணைத் தலைவா் வி.டி.ஆா்.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சித் தலைவா் நந்தினி கரிகாலன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 15 மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சொத்து வரி உயா்வுக்கான தீா்மானத்தை தலைவா் க.நந்தினி கரிகாலன் கொண்டு வந்தாா். அப்போது, அதிமுகவை சோ்ந்த ஜெயலட்சுமி முருகதாஸ், சொத்து வரியை உயா்த்தினால் பேரூராட்சி பகுதி மக்கள் பாதிக்கப்படுவா். தீா்மானத்தை அதிமுக எதிா்க்கிறது எனக் கூறி வெளியேறினாா். அவருடன் மற்ற 3 அதிமுக உறுப்பினா்களும் வெளியேறி அரசு எதிராக முழக்கங்களை எழுப்பிவிட்டு அங்கிருந்து சென்றனா்.