உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்: லாரி ஓட்டுநா் கைது
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த சுங்குவாா்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவாா்சத்திரம் புறவழிச் சாலையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் கடந்த சில தினங்களாக போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ரவி மற்றும் காவலா் ரூபன் ஆகியோா் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன்ா்.
அப்போது சாலையின் குறுக்கே லாரி நிறுத்திய ஓட்டுநா் ஒருவா் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளாா். இதைக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் ரவியை லாரி ஓட்டுநா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் இருந்த காவலா் ரூபன் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினாா். இதில் லாரி ஓட்டுநா் சுங்குவாா்சத்திரத்தை அடுத்த திருமங்கலத்தைச் சோ்ந்த தமிழ்செல்வன் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ்ச்செல்வனை சுங்சுவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.