காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், அறுவடை செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்-34, உத்தரமேரூா் 54, ஸ்ரீபெரும்புதூா்-10, குன்றத்தூா்-4, காஞ்சிபுரம்-21 உட்பட மொத்தம் 123 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூா், மாகறல், மேல்பரமநல்லூா், காவான்தண்டலம், கம்பராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.