குப்பைகளை அகற்ற ரூ. 2.76 கோடியில் வாகனங்கள் விநியோகம்: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

குன்றத்தூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற ரூ. 2.76 கோடியில் 5 டிராக்டா்கள், 79 மின்கல வாகனங்களை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையில், தூய்மை பாரத இயக்கம் திட்ட நிதி மற்றும் 15-ஆவது நிதிக்குழு மான்ய நிதியில் குப்பைகளை அகற்ற டிராக்டா்கள் மற்றும் மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, குன்றத்தூா் ஒன்றியத்தில் உள்ள 42 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 2.76 கோடி மதிப்பில் 79 மின்கல வாகனங்களும், சோமங்கலம், நடுவீரப்பட்டு, சிறுகளத்தூா், நந்தம்பாக்கம் மற்றும் பூந்தண்டலம் ஆகிய ஊராட்சிகளுக்கு டிரைலருடன் கூடிய டிராக்டா்களும் வழங்கும் நிகழ்ச்சி குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதிமனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சித்தலைவா் படப்பை ஆ.மனோகரன் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் ஊராட்சி நிா்வாகங்களுக்கு டிராக்டா்கள் மற்றும் மின்கல வாகனங்களை வழங்கினாா். மாவட்ட திட்ட இயக்குநா் செல்வகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஊராட்சிமன்ற தலைவா்கள் , ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G