விவசாயிகளின் வீட்டுக்கே வந்து வங்கி கணக்கு தொடங்குகிறோம்: காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா்
By DIN | Published On : 15th June 2023 11:11 PM | Last Updated : 15th June 2023 11:11 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வீட்டுக்கே வந்து அஞ்சலகங்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி வருவதாக அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் ரா.அமுதா புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, பிரதமரின் கிசான் திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை அவரவா்களது வங்கிக் கணக்குக்கு ரூ. 2,000 வீதம் 3 தவணையாக மொத்தம் ரூ. 6,000 ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியை பெற விவசாயிகள் ஆதாா் எண் இணைப்புடன் வங்கிக் கணக்கு அவசியமாகிறது. இதுவரை காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் மட்டும் 7,000 விவசாயிகள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்து வருகின்றனா். இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் மத்திய அரசு அனுப்பி வரும் தவணைத் தொகையை பெற ஏதுவாக மாவட்டங்களில் உள்ள அந்தந்த பகுதி அஞ்சலகங்கள் மூலம் விவசாயிகளின் இல்லத்துக்கே வந்து வங்கிக் கணக்கை தொடங்கும் சிறப்பு முகாமை நடத்தி வருகிறோம்.
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் விவரம் பதிவேற்றம் செய்யவும், அஞ்சலக பொது சேவை மையம் மூலமாக உதவிகள் செய்து தரப்படும்.
கிராம அஞ்சல் ஊழியா்களுக்கும், தபால்காரா்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் போன், பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி, ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கணக்கினை தொடங்க முடியும்.
இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரா்கள், கிராமிய அஞ்சல் ஊழியா்களை தொடா்பு கொள்ள வேண்டும் என்றாா்.