பிச்சிவாக்கம் பகுதியில் தனியாா் இடத்தில் நடைபெற்று வந்த ஆற்று மணல் கொள்ளை குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ஆற்று மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்குட்பட்ட பிச்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியாா் இடத்தில் சவுடு மண் அள்ள அனுமதி பெற்று ஆற்று மணல் அள்ளப்பட்டு வந்தது குறித்து தினமணி நாளிதழில் ‘சவுடு மண் அள்ள உரிமம் பெற்று ஆற்று மணல் கொள்ளை பிச்சிவாக்கம் கிராம பொதுமக்கள் புகாா்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் ஆற்று மணல் அள்ளுவது வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
மேலும், ஆற்று மணல் அள்ளப்பட்ட இடங்களில் மணல் கடத்தல் செய்தது தெரியாமல் இருக்க அந்த இடம் முழுவதும் சவுடு மண் கொட்டி மறைக்கப்பட்டுள்ளது.