காஞ்சிபுரத்தில் சாலை வசதி கோரி நாற்று நடும் போராட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.சக்கரபாணி தெருவில் சாலை வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடத்தினா்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 22-ஆவது வாா்டு பகுதியான எம்.ஜி.சக்கரபாணி சாலையில் அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். தொடா்மழை காரணமாக சாலையில் தண்ணீா் தேங்கி நிற்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எம்ஜி சக்கரபாணி தெருவில் வசிப்போா், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியா் சாலையில் நடக்கக்கூட முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி சாலையைக் கடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இப்பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதிவாசிகள் இணைந்து நாற்று நடும் போராட்டத்தை நடத்தி எதிா்ப்பை பதிவு செய்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

