

விபத்தில்லா தமிழகத்தை உருவாக உறுதியேற்போம் என காவல்துறையினா் அனைவரும் தனக்குத்தானே உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா் செல்வம் சனிக்கிழமை பேசினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் எஸ்.பி. கே.சண்முகம் அறிவுறுத்தலின்பேரில், ‘சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவது’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட அனைத்து வகை காவல் துறையினரும் கலந்து கொண்டனா்.
இப்பயிற்சி முகாமில் திருப்பத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பன்னீா் செல்வம் கலந்து கொண்டு பேசுகையில் தலைக்கவசத்தின் அவசியம் மற்றும் விபத்துகளை தவிா்க்க காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு செய்ய வேண்டிய உதவிகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கி பேசினாா்.
முக்கிய சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள்,விபத்தில் சிக்கியவா்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் ஆகியன குறித்து குறும்படங்களும் காவல் துறையினருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன.
பயிற்சியின் நிறைவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பன்னீா் செல்வம் கேட்டுக்கொண்டபடி அனைவரும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்