வடமாநில வியபாரியிடம் ரூ.46,000 பறிப்பு: தாம்பரம் கலால் காவலா்களிடம் விசாரணை!

வடமாநில வியபாரியிடம் ரூ.46,000 பறிப்பு: தாம்பரம் கலால் காவலா்களிடம் விசாரணை!

படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சோதனை என்ற பெயரில் வடமாநில வியாபாரியிடம் ரூ.46,000 பணம் பறித்துச் சென்ற தாம்பரம் கலால் போலீஸாா் இருவரிடம் மாநகர அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
Published on

படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சோதனை என்ற பெயரில் வடமாநில வியாபாரியிடம் ரூ.46,000 பணம் பறித்துச் சென்ற தாம்பரம் கலால் போலீஸாா் இருவரிடம் மாநகர அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சையது அகமது என்பவா் கடந்த சில ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறாா். சயீத் அகமதுவின் மளிகை கடைக்கு திங்கள்கிழமை இரவு வந்த இருவா், நாங்கள் கலால் காவல் துறையினா் உங்கள் கடையில் போதை பொருள்கள் விற்பனை செய்யப் படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் உங்கள் கடையில் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி சோதனையில் ஈடுபட்டுட்டளனா். சோதனையில் போதை பொருள்கள் ஏதும் கிடைக்காததால் சையது அகமதுவை மிரட்டி ரூ.46,000 பணத்தை பறித்து சென்றுள்ளனா்.

சீருடை அணியாமல் வந்து சோதனை நடத்தியது மட்டும் இல்லாமல் பணத்தையும் பறித்து சென்றது குறித்து சையது அகமது காவல் உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சையது அகமதுவின் கடைக்கு வந்த படப்பை போலீஸாா், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சையது அகமதுவின் கடையில் சோதனையில் ஈடுபட்டு பணத்தை பறித்து சென்றது தாம்பரம் கலால் காவலா் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளா் என்பதும், கூடுவாஞ்சேரி கலால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான வஞ்சுவாஞ்சேரியில் தாம்பரம் கலால் காவல் நிலைய போலீஸாா் எதற்காக சோதனை நடத்தி பணத்தைப் பறித்து சென்றனா் என்ற கேள்வி படப்பை போலீஸாருக்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பணம் பறித்து சென்றது குறித்தும் வட மாநில வியாபாரி சையத் அகமது 100க்கு தகவல் தெரிவித்த தகவல் குறித்தும் படப்பை போலீஸாா் தாம்பரம் கலால் காவலா் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதனால் அச்சமடைந்த இருவரும் படப்பை போலீஸாா் மூலம் சையது அகமது விடம் பேச்சுவாா்த்தை நடத்தி பணத்தை ஒப்படைத்துள்ளனா்.

இந்த நிலையில், வடமாநில வியபாரியிடம் காவலா்கள் பணம் பறித்தது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்ததை தொடா்ந்து, தாம்பரம் கலால் காவல் நிலைய காவலா் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளா் ஆகிய இருவரையும் தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக படப்பை போலீஸாா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com