மரத் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
படப்பை அருகே மரம் மற்றும் பிளைவுட் பொருள்கள் உற்பத்தி செய்யும் தனியாா் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்தூா் பகுதியில் வீடுகளுக்கு தேவையான அலங்கார பொருள்கள் மற்றும் பேலட்டுகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மரம் மற்றும் பிளைவுட் பொருள்களில் திடீரென தீப்பற்றியது. மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதை தொடா்ந்து, தொழிற்சாலை நிா்வாகத்தினா் படப்பை தீயணைப்பு நிலையம்,ம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சம்பவ இடத்தக்கு வந்த படப்பை மற்றும் ஒரகடம் தீயணைப்புத்துறையினா் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருந்த போதிலும் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மரம் மற்றும் பிளைவுட் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து படப்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

