பரந்தூா் விமான நிலைய திட்டம்: 17-ஆவது முறையாக கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 17-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பொதுமக்கள் கடந்த 1,000 நாள்களைகடந்து இரவு நேரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
மேலும் கடந்த காலங்களில் கிராம சபைக் கூட்டங்களிலும் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், ஏகனாபுரம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் சுமதிசரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பரந்தூா் புதிய விமான நிலையத்திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து 17-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

