காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியுடன் சிபெட் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினிரியங் டெக்னாலஜி எனப்படும் சிபெட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனம் சிபெட். மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் டெக்னாலஜி எனப்படும் சிபெட் நிறுவனமும், காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேனும், சிபெட் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மூத்த திறன் வல்லுநா் சித்தாந்தன் இருவரும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதனை மாற்றிக் கொண்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளில் மாணவா்கள் பயன்பெறும் வண்ணம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக மாணவா்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொழில்நுட்பத் துறைகளில் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்புகளை அதிக அளவில் பெற உதவியாக இருக்கும் என்றும் கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் தெரிவித்தாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் வினு சக்கரவா்த்தி நன்றி கூறினாா்.

