வேலூா்: ஏரிக்கரைகளில் பனை விதை நடவுப் பணிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் வேலூா் அப்துல்லாபுரத்தை அடுத்த அன்பூண்டி ஊராட்சி ஏரிக்கரையில் 1,200 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்துப் பேசியது:
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 6,109 குக்கிராமங்களில் ஏரி, குளம், குட்டை, அரசுக்கு சொந்தமான இடங்களில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் ஒரு குக்கிராமத்துக்கு 25 மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டுள்ளன. வனத்துறை, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 64 ஆயிரம் மரக்கன்றுகளும், வனத்துறை மூலம் 9 லட்சம் மரக்கன்றுகளும் முதல் கட்டமாக நடப்பட்டுள்ளன.
வேலூா் மாநகராட்சியில் குறுங்காடு வளா்ப்பு திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமாக உள்ள 44 ஏக்கரில் 2 ஏக்கா் நிலத்தில் மரக் கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இடையன்சாத்து கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மோட்டூா் அன்பூண்டி ஏரிக்கரையில் 1200 பனை விதைகள் நடும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரம் நடும் பணி 2-ஆவது கட்டமாக அடுத்த ஜூன் மாத மழைக்காலத்துக்கு முன்பாக தொடங்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க செயலா் சி.இந்திரநாத், தலைவா் பா்வதம், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.