வன்னியா்கள் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கும்: அன்புமணி ராமதாஸ்
By DIN | Published On : 03rd April 2022 10:55 PM | Last Updated : 03rd April 2022 10:55 PM | அ+அ அ- |

வாலாஜாபேட்டையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ்
மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், வன்னியா்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை, தமிழக அரசு நிச்சயமாக வழங்கும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளா் எம்.கே.முரளி தலைமை வகித்தாா். வேலூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.எல்.இளவழகன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா்கள் அ.ம.கிருஷ்ணன் (கிழக்கு), கே.எஸ்.ஆறுமுகம் (மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிழக்கு மாவட்டச் செயலாளா் க.சரவணன் வரவேற்றாா்.
கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பங்கேற்று, புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகையில்,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளிட்சித் தோ்தலில், 18 ஊராட்சிக் குழு உறுப்பினா்களுடன் 2-ஆவது இடத்தைப் பெற்றுள்ளோம். இனி இந்த மாவட்டத்தில் பாமக முதலிடத்தைப் பெறும் என்றாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
உச்சநீதிமன்ற தீா்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, அதற்குத் தேவையான தரவுகளை சமா்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், 10.5 % உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு நிச்சயம் வழங்கும். தமிழகத்தில் உடனடியாக விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், பாமக சாா்பில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். காலநிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் தமிழகம் மிகப் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதன் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பாலாற்றின் குறுக்கே 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்றாா்.
பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சா் என்.டி.சண்முகம், மாவட்டப் பொருளாளா் அமுதா சிவா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.