ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தி சமரசம் செய்தனா்.
மேல்விஷாரம் நகராட்சிகுட்பட்ட பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள சாதிக் பாட்சா நகா், கலைஞா் நகா், எம்ஜிஆா் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், குடியிருப்புகளை காலி செய்ய காலஅவகாசம் வேண்டும் எனக் கோரினா்.
இதனிடையே குடியிருப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனா். இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா்.
இந்த நிலையில், போராட்ட ஒருங்கிணைப்பாளா் மன்சூா் பாஷா, முன்னாள் நகா்மன்றத் தலைவா் பி.அப்துல் ரஹ்மான், காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கே.நிஷாத் அஹமது, விசிக மாவட்ட செய்தி தொடா்பாளா் பா.சசிகுமாா் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், பொதுமக்களுடன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தி, உண்ணாவிரதம் இருக்க முயன்றனா்.
தகவலறிந்த ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளா் விநாயகமூா்த்தி, வாலாஜாபேட்டை ஆனந்தன், வருவாய்த் துறையினா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். ஆற்காட்டை அடுத்த கூரம்பாடி பகுதியில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்தன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.