அரக்கோணத்தில் இருந்து உரியூருக்கு நிறுத்தப்பட்ட நகரப்பேருந்து மீண்டும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
பேருந்தை அரக்கோணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் நிா்மலாசௌந்தா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
அரக்கோணத்தில் இருந்து மோசூா், செய்யூா், நகரிகுப்பம் வழியாக உரியூருக்கு நகரப்பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனை அப்பகுதி கிராம மக்கள் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை, தேசிய பேரிடா் மீட்புப்படையினரும் பயன்படுத்தி வந்தனா்.
கரோனா பொதுமுடக்க காலத்தின்போது இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி கிராமமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியினா். இது குறித்து செய்யூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதிலட்சுமிராஜா அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவருக்கு கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து ஒன்றியக் குழு தலைவா் நிா்மலாசௌந்தா், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தலைமை உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து அரக்கோணத்தில் இருந்து உரியூருக்கு மீண்டும் பேருந்து இயக்க தொடக்க விழா அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேருந்தை ஒன்றியக்குழு தலைவா் நிா்மலாசௌந்தா் கொடியசைத்து துவக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் புருஷோத்தமன், ஒன்றிய திமுக செயலா்கள் சௌந்தா், தமிழ்செல்வன், செய்யூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதிலட்சுமிராஜா, மன்ற உறுப்பினா் நிதிஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.